தமிழ்நாடு

tamil nadu

ராகு பகவான் ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் - கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 10:51 PM IST

Theerthavari Utsavam: ராகு பகவானுக்குரிய ஸ்தலமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று (டிச.10) பிற்பகல், சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Thirunageswaram Naganatha Samy Temple Theerthavari Utsavam
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் தீர்த்தவாரி உற்சவம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் தீர்த்தவாரி உற்சவம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலில் திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்க்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீ கிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள் மற்றும் கலைமகள் வீற்றிருந்து பணி செய்ய, சக்கர பீடத்தின் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று ராகு பகவான் தனிக்கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் ராகுபகவான் திருமணக் கோலத்தில் ஸ்ரீ நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

இவருக்குப் பால் அபிஷேகம் செய்வித்தால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் ராகுபகவான் மஹாசிவராத்திரி நன்னாளில், 2ஆம் காலத்தில் நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார். அந்த வகையில், இத்தகைய பெருமைமிகு தலத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம், ஐந்து தலை நாகம், கைலாச வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 10ஆம் நாளான இன்று பிற்பகல், கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு, தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களில், நாகநாத சுவாமி சமேத பிறையணியம்மன், கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர், வெள்ளி முக வாகனத்தில் விநாயகப்பெருமானும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியும், கோயில் திருக்குளமான சூர்யபுஷ்கரணி எதிரே அமைக்கப்பட்ட விசேஷ பந்தலில் எழுந்தருளினர்.

திருக்குள படித்துறையில், அஸ்திரதேவர் எழுந்தருள, அங்கு அவருக்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, தேன், பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சிவாச்சாரியார் அஸ்திர தேவருடன் திருக்குளத்தில் இறங்கி குளத்து, நீரில் மும்முறை முங்கி எழ, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:போடி மெட்டு பகுதியில் உருவாகிய புதிய நீர்வீழ்ச்சிகள்.. செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்..

ABOUT THE AUTHOR

...view details