தமிழ்நாடு

tamil nadu

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கொடியேற்றம் கோலாகலம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 11:00 PM IST

Thirunageswaram Temple: கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கோயில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.

Thirunageswaram Temple
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கொடியேற்றம் கோலாகலம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கொடியேற்றம் கோலாகலம்

இத்தலத்தில் குன்றுமுலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீற்றிருந்து பணி செய்ய, ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தைப் பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார்.

இத்தலத்தில் ஸ்ரீ ராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும். இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார்.

இத்தகைய பெருமைமிகு ஸ்தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும், இவ்விழா இன்று (டிச.1) காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு எண்ணெய் காப்புசாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, தனுசு லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. அதன்பின், பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 ஆம் நாளான, டிச.05 ஆம் தேதி செவ்வாய்கிழமை ஓலைச்சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 7ஆம் நாளான டிச.07ஆம் தேதி வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணமும், 09ஆம் நாளான டிச.09ஆம் தேதி சனிக்கிழமை காலை திருத்தேரோட்டமும் நடைபெறும்.

தொடர்ந்து 10ஆம் நாளான டிச. 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திருக்கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அதன்பின், 11ஆம் நாளான டிச.11ஆம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி, இரவு புஷ்ப பல்லாக்குடன் திருவீதியுலா உற்சவத்துடன் இந்த ஆண்டிற்கான கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா ராகு ஸ்தலத்தில் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விளையாட்டு மைதானத்தில் நூலகம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details