தமிழ்நாடு

tamil nadu

தஞ்சாவூரில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 'தாய்மை நூலகம்' திறப்பு - கர்ப்பிணிகள் வரவேற்பு!

By

Published : May 4, 2023, 8:11 PM IST

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 'தாய்மை நூலகம்' திறக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தாய்மை நூலகம் திறப்பு
ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தாய்மை நூலகம் திறப்பு

ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தாய்மை நூலகம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'தாய்மை நூலகம்' திறக்கப்பட்டுள்ளது. தஞ்சை கல்லுகுளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நல்ல மனநிலையை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். தாயின் மனநிலைக்கு ஏற்ப குழந்தையின் மனநிலையும் இருக்கும். கர்ப்ப காலகட்டத்தில் கர்ப்பிணிகள் புத்தகம் படித்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சிப் பகுதியில் கல்லுகுளம், சீனிவாசபுரம், கரந்தை, மகர்நோன்பு சாவடி ஆகிய நான்கு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு பிரசவங்களும் நடைபெற்று வருகின்றன. நவீனக் கருவிகளும் இங்கு நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இதனையடுத்து தஞ்சை மேரிஸ்கார்னர் கல்லுகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இங்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் கர்ப்பிணிகள் வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். மேலும் பிரசவமான பெண்களும் பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பேறுகால ஆலோசனைகளும் பெறுகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பிரசவமான பெண்கள், பொதுமக்கள் என மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் சிகிச்சைக்கு காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் வகையிலும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நல்ல மனநிலையை உருவாக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் ''தாய்மை நூலகம்'' திறக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மருத்துவர்களைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் பெண்கள் ஆர்வமுடன் புத்தகங்களைப் படித்து பயன்பெறுகின்றனர். செல்போன்களில் பொழுதைப் போக்காமல் பயனுள்ள வகையில், நேரத்தைச் செலவிட இந்த நூலகம் உதவுகிறது. இது குறித்து தஞ்சை மாநகராட்சி மாநகர் நல அலுவலர் மருத்துவர் சுபாஷ்காந்தி கூறும்போது, ''தமிழ்நாட்டில் முதன்முறையாக கல்லுகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'தாய்மை நூலகம்' திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற மூன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதுபோல் நூலகம் திறக்கப்படும்.

இந்த நூலகத்தின் மூலம் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள், புத்தகங்களைப் படித்து புத்துணர்ச்சியாக இருப்பதுடன் சுகப்பிரசவம் ஆவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தும். புத்தகம் படிக்க இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புத்தகம் படிக்கும் எண்ணத்தினை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சித்த மருத்துவப்பல்கலைக் கழக மசோதாவிற்காக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது - அமைச்சர் மா.சு

ABOUT THE AUTHOR

...view details