தமிழ்நாடு

tamil nadu

வீட்டிற்கு வெளியே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன் - மனைவி பலி!

By

Published : May 2, 2023, 1:42 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

death
மின்கம்பியை மிதித்து இருவர் பலி

தஞ்சாவூர்: பேராவூரணியை அடுத்த காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் (70), இவரது மனைவி சம்பூரணம் (62). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களது உறவினர்கள் அரவணைப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் பேராவூரணி பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வீட்டு வாசலில் மேலே சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இயற்கை உபாதைக்காக உடையப்பன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்துள்ளார்.

அதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது கணவரின் அலறல் சத்தம் கேட்டு அவரை தூக்குவதற்காக வந்த அவரது மனைவி சம்பூரணமும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்த பார்த்த போது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரிய வந்ததுள்ளது.

இதுகுறித்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட கிராம மக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடையப்பன் - சம்பூரணம் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "மிதியக்குடிக்காடு கிராமம் முழுவதும் மின் கம்பிகள் பழுதடைந்து எந்த நேரமும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் வசிக்கின்றோம். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: RN Ravi: "விமர்சனங்களை எதிர்கொள்ள வலிமை கொடுத்தது பகவத்கீதை" - ஆளுநர் ஆர்.என்.ரவி!

ABOUT THE AUTHOR

...view details