தமிழ்நாடு

tamil nadu

50 அடி உயர் டேங்க் மீது ஏறிவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி பத்திரமாக மீட்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 9:08 PM IST

கும்பகோணம் அருகே மனஅழுத்தத்தால் 50 அடி உயர் தண்ணீர் தொட்டி மீது ஏறிவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்து வந்த கல்லூரி மாணவியை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

50 அடி உயர நீர்த்தொட்டியில் இறங்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி
50 அடி உயர நீர்த்தொட்டியில் இறங்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி

50 அடி உயர நீர்த்தொட்டியில் இறங்க முடியாமல் தவித்த கல்லூரி மாணவி

தஞ்சாவூர்: திருவாரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னை தனியார் கல்லூரி ஒன்றில், விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவரை, மன மாற்றத்திற்காக இவரது பெற்றோர் திருவாரூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்.08) கும்பகோணம் திருவலஞ்சுழி அருகே உள்ள சாமியாரான கோபால கிருஷ்ணனிடம் அருள் வாக்கு பெற்று, முடி கயிறு போடுவதற்காக, கல்லூரி மாணவியை அவரது பெற்றோர் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

சாமியார் வருவதற்கு தாமதமாகும் என்று அங்கிருந்தோர் கூறியதால், அருகே உள்ள கோயிலில் காத்திருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், திடீரென அந்த இளம் பெண் அருகே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறியுள்ளார். மேல்நிலை நீர்த்தொட்டி சுமார் 50 அடி உயரம் இருந்ததால், உயரத்தை பார்த்து அஞ்சி இறங்க முடியாமல் மாணவி தவித்துள்ளார்.

அப்பகுதி மக்கள் சிலர், மாணவி நீர்த்தொட்டியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் பொது மக்கள் அவரை மீட்க முயற்சி எடுத்த போதும் மீட்க முடியாததால், கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஐந்து பேர் கொண்ட தீயணைப்புக் குழு, இளம் பெண்ணை 50 அடி உயரத்தில் இருந்து மீட்டனர்.

உயரத்தைக் கண்டு தரையிரங்க அஞ்சிய மாணவியின் கண்களை மூடிவிட்டு கயிறைக் கட்டி, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக தரை இறக்கி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த மாணவி உண்மையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் ஏறினாரா அல்லது தற்கொலை செய்துகொள்ள நீர்த்தொட்டியில் ஏறினாரா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:இடைநிலை ஆசிரியர்கள் முதல் வாச்சாத்தி தீர்ப்பு வரை.. முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த கோரிக்கை மனு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details