தமிழ்நாடு

tamil nadu

அம்பேத்கரை பாஜகவினர் வாக்கு வங்கியாக பார்க்கின்றனர்: கி.வீரமணி குற்றச்சாட்டு

By

Published : Apr 14, 2023, 4:47 PM IST

அம்பேத்கரை பாஜகவினர் வாக்கு வங்கியாக பார்ப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

K.Veeramani
கி.வீரமணி

தஞ்சாவூர்:அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை அருகே உள்ள மறியல் பகுதியில், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் வீரமணி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டில் இன்னும் சமத்துவம் நிலவவில்லை. அரசியல் சுதந்திரம் கிடைத்து சமூகத்தில் புரட்சிகள் வரவில்லையெனில் அந்த அரசியல் சுதந்திரம் பயனற்றது என அண்ணல் அம்பேத்கர் கூறினார். அதைத்தான் இன்று நடைமுறையில் பார்க்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டம் தீண்டாமை ஒழிப்பை மையப்படுத்தியது, சாதியை மையப்படுத்தியது என்று சொன்னாலும், இன்னும் அதற்கு முட்டுக்கட்டைகள் பல இடங்களில் இருந்து கிளம்பக்கூடிய அளவிற்கு பிற்போக்குவாதிகள் பல இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அது வெவ்வேறு இடங்களாக இருக்கிறது.

அனைவரும் சமமானவர்களே; அனைவரும் உறவினர்களே என்று உறுதியாக எடுத்துக்கொண்டு மனித நேயத்தை நோக்கி நம்முடைய சமுதாயத்தை நடத்த வேண்டும். அதற்கு கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

அதற்கு திராவிட மாடல் ஆட்சி சமத்துவ நாளை அறிவித்து வழிகாட்டி இருக்கிறது. இது நாள் பிரகடனமாக இல்லாமல் உண்மையிலேயே சமத்துவம் நடக்கக் கூடிய அளவிற்கு வர வேண்டும். மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சுடுகாட்டிற்கு போகின்ற பாதை ஒழுங்காக இல்லை. மேலும் தனி சுடுகாடு என்று ஆக்கக்கூடிய கொடுமையும் உள்ளது.

சாதி ஒழிப்பும், சமத்துவமும் இன்னும் போய் சேர வேண்டிய இடங்கள் ஏராளம் இருக்கின்றன. காந்தியின் கொலைக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அம்பேத்கர் வாக்கு வங்கிக்கு பயன்படுவார் என்று கருதுகின்றனர். அம்பேத்கரை சமுதாய புரட்சியாளராக தான் நாங்கள் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் (பாஜக) வாக்கு வங்கி கருவியாக பார்க்கின்றனர்’’ என்றார்.

இதையும் படிங்க: கழிவறைக்குச் சென்ற பெண் ஊழியரை எட்டிப்பார்த்த மேனேஜர்? - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details