தமிழ்நாடு

tamil nadu

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்... தகவலறிந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் தப்பியோட்டம்? நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 5:25 PM IST

Updated : Oct 28, 2023, 5:42 PM IST

Tenkasi District Collector: தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே அரசு பேருந்து நிற்கவில்லை என பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராடுவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தப்பியோட்டம்

தென்காசி:குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வள்ளியூர் என்கின்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இந்த வழியாக செல்லும் பேருந்துகள் ஏதும் வள்ளியூர் பகுதியில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்ததாகவும் இருந்த போதும், போக்குவரத்து துறை அதிகாரிகள் வள்ளியூர் பகுதியில் பேருந்தை நிறுத்தி செல்ல எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று (அக். 28) தெற்குமேடு பகுதியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற (வழித்தட எண்: 31 பி) அரசு பேருந்தையும், அதே வழித்தடத்தில் மறுமார்க்கமாக வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தையும் சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, தனது வீட்டில் இருந்து அந்த வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்று கொண்டு இருந்த மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனின் வாகனமும், பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது பாதுகாவலர் மூலம் நடந்த பிரச்சினையை தெரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காரை திருப்பிக் கொண்டு வேறு வழியில் சென்றதாக கூறப்படுகிறது. இது அங்கு இருந்த பொது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளாமல் செல்வது வேதனை தரும் செயலாக உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அங்கு வந்த குற்றாலம் போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமாதானம் செய்து சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சேலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்!

Last Updated : Oct 28, 2023, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details