தமிழ்நாடு

tamil nadu

Courtallam Falls: தொடங்கியது குற்றால சீசன்.. வியாபாரிகள் மகிழ்ச்சி!

By

Published : Jun 13, 2023, 11:23 AM IST

Updated : Jun 13, 2023, 11:52 AM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 12 நாட்கள் தாமதத்திற்கு பிறகு சீசன் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடங்கியது குற்றால சீசன்.. வியாபரிகள் மகிழ்ச்சி!
தொடங்கியது குற்றால சீசன்.. வியாபரிகள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசன் 12 நாட்கள் தாமதத்திற்கு பிறகு தொடங்கி உள்ளது

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதிகளில் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இந்த அருவிகள், கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

இதனிடையே, கடந்த மூன்று நாட்களாக தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் கூடிய இதமான சீதோஷ்ன நிலை நிலவியது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) இரவு மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மழை பெய்தது.

இவ்வாறு பெய்த மழையின் காரணமாக நீண்ட நாட்களாக முற்றிலும் வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியில், இன்று (ஜூன் 13) காலை முதல் லேசான தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக, குற்றால சீசனானது ஜூன் மாத தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை களைகட்டுவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய இந்த சீசனானது, சற்று காலதாமதமாக தற்போது தொடங்கி உள்ளது. அதேபோல், குற்றாலம் பகுதிகளில் உள்ள ஐந்தருவியில் இருக்கும் ஐந்து அருவிகளில் 4 அருவிகளில் மட்டும் தண்ணீர் தற்போது கொட்டி வருகிறது.

இதனால் இந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதேநேரம், தற்போது வரை தென்காசி மாவட்டத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் மட்டுமே குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர். இதற்காக இன்று காலை முதல் சுற்றுவட்டார மக்கள் குற்றால அருவியில் குளித்து வருகின்றனர்.

மேலும், ஜூன் மாதம் அருகில் உள்ள மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி, அதன் பருவக் காற்று கேரளா மலைப் பகுதியில் இருந்து குற்றாலம் வழியாக தமிழ்நாட்டை நோக்கி கீழ் திசையில் வீசும். அது மட்டுமல்லாமல், கேரளாவில் பலத்த மழை பெய்யும்போது, அங்கு இருந்து மழைச்சாரல் காற்றோடு கலந்து குற்றாலத்தில் வீசும்.

அதேபோல், குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே புளியரை, செங்கோட்டை ஆகிய மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் அவ்வப்போது குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் தொடங்கி உள்ள குற்றால சீசனால், வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும், குற்றால சீசனை ஒட்டி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசு தரப்பில் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், பார்க்கிங், பூங்கா பராமரிப்பு ஆகியவற்றையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:Coutrallam Falls: குளு குளு குற்றாலம் செல்ல திட்டமா..? அப்போ இதை படிங்க!

Last Updated : Jun 13, 2023, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details