சிவகங்கை:சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டமான பெரியார் சமத்துவபுரம் திட்டம் கடந்த திமுக ஆட்சியின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தேர்தல் வந்ததைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கடந்த பத்தாண்டுகளாக வீடுகளைப் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்த இந்த வீடுகள் மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பழுது நீக்கப்பட்டு புத்தம் புதிய வீடுகளாக பயனாளிகளுக்கு வழங்கும் முகமாக வீட்டின் அனைத்து வசதிகளும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
102 வீடுகள் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, சமுதாயக்கூடம், நூலகம், விளையாட்டு மைதானம், உயர்நிலை தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அனைத்து பல்வேறு அம்சங்களுடன் கூடிய கோட்டைவேங்கைபட்டி பெரியார் சமத்துவபுரத்தை நேற்று (மே.17) ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரியார் பெயரில் அமைக்கப்பட்டிருந்த சமத்துவபுரங்கள் தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் அவைகள் பயனாளிகளுக்கு வழங்குவது தள்ளிப் போய்விட்டது.