தமிழ்நாடு

tamil nadu

நிலக்கரி பற்றாக்குறை - மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

By

Published : May 2, 2022, 5:36 PM IST

தமிழ்நாட்டில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூரில் மின் உற்பத்தி பாதிப்பு

சேலம்:மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் நான்கு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாள்தோறும் ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதற்கென நாளொன்றுக்கு 26 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து சுமார் 12 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே ரயில்கள் மூலம் நிலக்கரி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடைக்காலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. ஆனால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்: தற்போது மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 7 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இதனால், 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திலுள்ள 2,3,4ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதலாவது அலகில் மட்டும் 210 மெகாவாட்டிற்குப் பதிலாக 160 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிலக்கரியை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக மேட்டூர் அனல்மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தொடரும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு இயங்குவதால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், தொழிற்சங்க நிர்வாகிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஏறியது வர்த்தக சிலிண்டர் விலை.. 26 நாட்களாக ஏறாத பெட்ரோல், டீசல் விலை...

ABOUT THE AUTHOR

...view details