தமிழ்நாடு

tamil nadu

எஸ்டேட்டில் கூலி வேலை செய்துவந்த தம்பதி வெட்டி கொலை: குற்றவாளிக்கு போலீஸ் வலை!

By

Published : Sep 30, 2020, 9:19 PM IST

சேலம் மாவட்ட ஏற்காடு பகுதியில் கூலி வேலை செய்துவந்த தம்பதியை வெட்டி படுகொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதி
கொலை செய்யப்பட்ட தம்பதி

சேலம்: ஏற்காடு அருகே கராரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்துவந்த தம்பதியை கொலைசெய்த குற்றவாளியைக் காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சிக்குள்பட்ட காவேரிபீக் கிராமத்திலுள்ள கராரா எஸ்டேட்டில், ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தைச் சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்துவந்தனர்.

இவர்கள் அங்குள்ள பணியாளர்கள் குடியிருப்பில் பல மாதங்களாக வசித்துவந்த நிலையில் இவர்களின் உறவினர் ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரிலிருந்து ஏற்காடு வந்து, கடந்த ஒரு வாரமாக கோண்டாபகனின் குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார். உறவினர்கள் என்பதால் ஒரே இடத்தில் சமையல் செய்து சாப்பிட்டுவந்துள்ளனர்.

மேலும், இவர்கள் மூவரும் கடந்த மூன்று நாள்களாக, ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, ஹிந்தி பாடல்களை ஒலிபெருக்கி மூலம் சத்தமாக கேட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பக்கத்து குடியிருப்பு வாசிகள் இவர்களின் நிலைகுறித்து , எஸ்டேட் மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, மேலாளர் சுனில்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு வீட்டினுள் இருந்த கோண்டாபகனை வெளியே வரக்கூறி அழைத்துள்ளார். பின்னர் கதவை தட்டி சத்தமிட்டுள்ளார். அப்போதும் பதில் இல்லை என்பதால் சந்தேகமடைந்த சுனில் குமார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு கோண்டாபகன் தலையில் வெட்டப்பட்ட நிலையிலும், சுதிகேன்ஸ் கழுத்தறுகக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் உடனடியாக ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், தகவலின்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் உமாசங்கர், ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கோண்டாபகனின் உறவினரான ஹைரா போத்ரே என்பவர் இக்கொலையை செய்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில், அருகிலுள்ள மாவட்ட காவல் நிலையங்களில் தகவல் கொடுக்கப்பட்டு , அவரைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மகன் கொலை செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் புகார் - வைரலாகும் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details