தமிழ்நாடு

tamil nadu

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் சேகர் பாபு

By

Published : Jul 23, 2021, 1:54 PM IST

அரசு நிர்வகிக்கும் கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது
கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது

சேலம்:பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (ஜூலை. 23) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திட்ட அறிக்கை தயார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அறநிலையத்துறையை பொருத்தவரை 10 லட்ச ரூபாய் வருமானம் உள்ள 539 கோயில்களை பட்டியலிட்டுள்ளோம். 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில்கள் வகைப்படுத்தியுள்ளோம். அனைத்து கோயில்களுக்கும் மாஸ்டர் பிளான் எனப்படும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

திருமண மண்டபங்கள்

அந்த அறிக்கையின் படி ஏற்கெனவே உள்ள சன்னிதானங்கள் மாற்றம் செய்யப்படாமல் ஆகமவிதிப்படி திருப்பணி நடைபெறும். கோயில் பரப்பளவு, கடைகள், திருத்தேர் இடங்கள், தெப்பகுள பராமரிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்படும். கோயில் வளாகத்தில் வாய்ப்புள்ள இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது

கோயில் ஆக்கிரமிப்பு

கடந்த 50 ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் வாடகை வருவதில் நிலுவை உள்ளது. இதனை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதேபோன்று ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மேலும், திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை முழுமையாக வேலி அமைத்து அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோயில் நகை

பொருளாதார மீட்பு நடவடிக்கையாக சட்ட திட்டங்களுக்குட்பட்ட குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு எந்த வித லாப நோக்கமும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படும்.

அதில்வரும் வருவாய் கோயில்களுக்கு பயன்படுத்தப்படும். கடந்த 9 ஆண்டுகளாக திருக்கோயில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தங்க நகை உருக்கப்படாமல் உள்ளது. அந்த காணிக்கைகளை கோயிலுக்கு தேவைப்படி எடுத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி வட்டியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை உடனடியாக மேற்கொள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் தனியார் சொத்து இல்லை. அரசு நிர்வகிக்கும் கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை. இதில், சில அமைப்புகள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது. தற்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை கோயில் யானைகளை மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலைகள் மீட்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடப்பட்ட 6 சிலைகளில் 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே திருடுப் போன சிலைகள் வெளிநாடுகளில் உள்ளதை கண்டறிந்துள்ளோம். அதனை மீட்டு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

ABOUT THE AUTHOR

...view details