தமிழ்நாடு

tamil nadu

ராணிப்பேட்டையில் CISF பயிற்சி நிறைவு விழா: உறுதிமொழி ஏற்பு, அணிவகுப்பை கண்டு ரசித்த பெற்றோர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 11:00 PM IST

Updated : Oct 10, 2023, 6:43 AM IST

Ranipet CISF Oath Taking Event: நாடு முழுவதும் 355 முக்கிய மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நாள்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தொழில் பாதுகாப்பு படை பிரிவின் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

CISF பயிற்சி நிறைவு வீரர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
CISF பயிற்சி நிறைவு வீரர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF) மண்டல பயிற்சி மையத்தில், கடந்த 6 மாதகால பயிற்சி முடித்த 47,48-வது படை பிரிவின் பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களின் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, பயிற்சி மையத்தின் முதல்வர் சாந்தி ஜி ஜெயதேவ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென்மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு, பயிற்சி நிறைவு செய்த 657 பெண்கள் மற்றும் 115 ஆண்கள் உட்பட 772 வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின், பயிற்சி முடித்த வீரர்கள் தேசிய கொடியின் முன் நாட்டிற்காக எப்போது உழைப்பேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் பேசிய மத்திய தொழில் பாதுகாப்பு படை தெற்குமண்டல தலைவர் சரவணன், “இன்று பயிற்சி நிறைவு செய்தவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாராளுமன்ற கட்டிடம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி ஆகியவற்றில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மேலும், ரிசர்வ் வங்கி, சுரங்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள், அணு உலைகள், ஆயில் எடுக்கும் இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் ஆகிய இடங்களிலும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என வாழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து, “1969ஆம் ஆண்டு முதல் 355 மையங்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 355 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும், 28 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான மக்களுக்கு பாதுகாப்பு சேவை செய்து வருகின்றனர்” என்றார்.

அதேபோல் பன்னாட்டு விமான நிலையங்களில் 6 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான விமான பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர் உட்பட உயர் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:கலைஞர் பேனா நினைவு சின்னம் வழக்கு: புதிய சிக்கல்! பசுமை தீர்ப்பாயம் முடிவு என்ன?

Last Updated :Oct 10, 2023, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details