பாக் ஜலசந்தி கடற்பகுதி என்பது தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் இடமாகும். ராமேஸ்வரத் தீவும், அதைத் தொடர்ந்துள்ள மணல் திட்டுகளான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனைப் படைத்த அமெரிக்காவைச் சார்ந்த பெண்மணி எடி ஹு (45), இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடப்பதற்காகக் கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள், இலங்கைத் தூதரகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளின் அனுமதியும் கிடைத்த நிலையில், இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து நேற்று அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு இங்கிலாந்தைச் சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடி ஹு நீந்தத் தொடங்கினார்.