தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் தலைவிரித்தாடும் சாதிய கொடூரம்... கோயில் வழிபாட்டிலும் பாரபட்சம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 7:46 PM IST

Clash in temple festival in pudukottai: கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடையே கோயில் வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் வட்டாட்சியர் கோயிலுக்கு சீல் வைத்துள்ளார்.

Clash between two sides over temple festival in Pudukkottai district Tahsildar sealed the temple
இருதரப்பு மோதலால் கோயிலுக்கு சீல் வைப்பு

இருதரப்பு மோதலால் கோயிலுக்கு சீல் வைப்பு

புதுக்கோட்டை:காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்ற சொல்லிற்கு ஏற்ப சாதிய பாகுபாடுகள் ஒருபுறம் களையப்பட்டாலும், மறுபுறம் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. அதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோயில்களில் சாதிய பாகுபாடுகள் அதிக அளவு நடந்தேறும் வண்ணம் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கு கோயில்களில் அனுமதி மறுக்கப்படுவதும், அவர்களுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதும் தொடர்கதை ஆகி உள்ளது. அவ்வாறு இருதரப்பினரால் வழிபாடு நடத்தப்பட்ட கோயிலுக்கு திருவிழா நடைபெறுவது குறித்த பிரச்சினையில், கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஊர் பொதுமக்கள் திருவிழா நடத்திட முடிவு செய்து முன்னேற்பாடு செய்து வந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தனி மண்டகப்படி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து போலீசார் அந்த கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்தக் கோயில் பிரச்சினை தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டாட்சியர் காமராஜ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்ட நிலையில் வட்டாட்சியர் காமராஜ், பட்டியல் சமுதாய மக்களுக்கு தனிக்கரை வழங்க வேண்டும், இல்லையென்றால் இந்து சமய அறநிலையத் துறையிடம் கோயில் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே ஆடி மாதம் நடந்த கோவில் திருவிழாவின் போது பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு மாற்றுச் சமூகத்தை சேர்ந்த மக்கள் சமாதானம் ஆகாததால் வட்டாட்சியர், ஊர் பொதுமக்கள் சமாதான முடிவுக்கு வரும் வரை கோயிலுக்கு சீல் வைப்பதாக கூறி கோயிலை பூட்டி சீல் வைத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிப்பு - பிரதமா் மோடிக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details