தமிழ்நாடு

tamil nadu

"கருக்கா வினோத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுங்கள்..." -அண்ணாமலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 9:04 AM IST

Updated : Nov 6, 2023, 10:40 AM IST

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்து திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Etv Bharatஎன் மண் என் மக்கள்’ நடை பயண யாத்திரை
Etv Bharatபாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

புதுக்கோட்டை:உதயநிதி ஸ்டாலினை விட நீட் எதிர்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சரிடம் அழைத்து சென்று திமுக இளைஞரணி செயலாளராக பதவி வாங்கி தர வேண்டும் என என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும், என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை 97வது தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அன்ணாமலை பேசியதாவது, "தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை என்று ஒத்தையாக கொடுத்துவிட்டு, கத்தையாக திருப்பி எடுத்துக் கொள்ளும் கட்சியாக திமுக இருக்கிறது. உரிமைத் தொகை என்பது வேறு உதவித் தொகை என்பது வேறு. உரிமைத் தொகை என்றால் அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆன நிலையில், முதலில் ரூ.30,000 பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு, அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினை விட நீட் எதிர்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சரிடம் அழைத்து சென்று திமுக இளைஞரணி செயலாளராக பதவி வாங்கித் தர வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்நாதன், துர்கா ஸ்டாலின் தான் சட்டமன்ற உறுப்பினராவதற்கு காரணம் என்று பேசி வருவது வெட்கக் கேடானது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்று இளைஞர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். அதன் விளைவாக தான் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டு வழக்கு உள்ள ரகுபதி, சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சராக பதவியில் உள்ளது வேதனை.

காமராஜர் அணைகளை கட்டினார், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அளித்தார், ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பை ஏற்படுத்தினார் என்று தலைவர்களுக்கு அடையாளம் இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்திற்கு என்று இருந்த அடையாளம் அழிந்து கொண்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு சந்தி சிரிக்கிறது. காவேரி பிரச்சினையை இவர்களே பூதாகரமாக்கி வருகின்றனர்.

கர்நாடகா துணை முதலமைச்சர் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிவரும் நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதைவிட முக்கியமான செய்தி பேசி உள்ளேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி பிரச்சினையை விட முக்கியமான பிரச்சினை என்ன உள்ளது.

நீட் பிரச்சினை தொடர்பாக திமுக கையெழுத்து வாங்கி வருகிறது. 50 லட்சம் கையெழுத்து வாங்க இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். திமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால், 17 தினங்களில் வெறும் 3.5 லட்சம் கையெழுத்து மட்டும் வாங்கி உள்ளனர்.

பொதுமக்கள் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து, இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறவில்லை. ஆகையால் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, ஒவ்வொரு எம்.எல்.ஏவும் பேருந்தில் மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி வருகின்றனர். நீட் தேர்வு முக்கியம் என்று பொதுமக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.

தமிழகத்தின் வீர விளையாட்டுக்கான ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற ஊர் விராலிமலை. புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டை காட்டுமிராண்டித்தன விளையாட்டு என்று கூறி காங்கிரஸ், திமுக மத்தியில் ஆண்ட அமைச்சரவை தடை விதித்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பிரதமர் மோடி. கிராம சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து உள்ள நிலையில் மத்திய அரசு புதிய கிராம சாலைகள் அமைப்பதற்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி வருகிறது" என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க:கரூரில் கொட்டித் தீர்க்கும் மழை.. அரசு பேருந்துக்குள் குடை பிடித்து சென்ற பயணிகளின் அவலநிலை!

Last Updated : Nov 6, 2023, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details