தமிழ்நாடு

tamil nadu

கோயில் திருவிழாவில் ஒருவர் அடித்துக் கொலை!

By

Published : Mar 1, 2021, 7:43 PM IST

புதுக்கோட்டை: அன்னவாசலில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.

அடித்துக் கொலை செய்யப்பட்டவர்
அடித்துக் கொலை செய்யப்பட்டவர்

அன்னவாசல் வேளார் தெருவைச் சேர்ந்த மூக்கன் மகள் மாரியம்மாள் (20). இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவில் ஒரு கடையில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அன்னவாசல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (24), விஜய் (22), மனோஜ்குமார் (19), பாலமுருகன் (16), பிரசாந்த் (17), விஜய்பிரபாகரன் (16), கருப்பையா ஆகிய ஏழு பேரும் மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாரியம்மாளின் தம்பி ஆறுமுகம் எதற்காகத் தனியாக வந்த பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் எனத் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருதரப்பிற்கும் பிரச்சினை ஏற்பட மாரியம்மாள், தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் பாலமுருகன் உள்ளிட்ட சிலர் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களது வீட்டிற்குச் செல்லும் வழியில் மறித்து ஆறுமுகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அடித்துக் கொலை செய்யப்பட்டவர்

இது குறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அன்னவாசல் காவல் துறையினர் ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து ஆறு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கருப்பையாவைத் தேடிவருகின்றனர்.

பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் அன்னவாசல் பகுதிகளில் ஒருதரப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் எங்கள் பகுதிகளில் வாழும் பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details