தமிழ்நாடு

tamil nadu

பேருந்தில் சிக்கிய 30 கிலோ கஞ்சா! கடத்திய இருவர் கைது

By

Published : Apr 20, 2021, 9:05 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஓடும் பேருந்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற 2 பேரை நடத்துனரும், பயணச்சீட்டு பரிசோதகரும் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

பேருந்தில் சிக்கிய 30 கிலோ கஞ்சா
பேருந்தில் சிக்கிய 30 கிலோ கஞ்சா

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறினர்.

முன்னுக்குப்பின் முரணாக பதில்

அப்போது, சீட்டுக்கு அடியில் இரண்டு பெரிய பைகள் இருப்பதைக் கண்டு, அதனை எடுத்துவந்த இரண்டு வாலிபர்களிடம் 'இதற்கு ஏன் பயணச்சீட்டு வாங்கவில்லை. பையில் என்ன உள்ளது' என்று விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த பைகளை எடுத்துவந்த இரண்டு வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, சந்தேகமடைந்த நடத்துனரும், பயணச்சீட்டு பரிசோதகர்களும் பைகளை திறந்து காட்டச்சொல்லி பார்த்தபோது, உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

30 கிலோ கஞ்சா

இதனைத்தொடர்ந்து, அவர்களை மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மங்களமேடு காவல் துறையினர், தொடர்ந்து இரண்டு வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம், கம்பத்தை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்த செல்வம், முஜீப் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சாவை கடத்திவந்து தென் மாவட்டங்களில் விற்பனை செய்பவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: 'மழையால் சாலையில் பிரேக் பிடிக்காமல் தக்காளி வாகனம் கவிழ்ந்து விபத்து'

ABOUT THE AUTHOR

...view details