தமிழ்நாடு

tamil nadu

DMK councillor suicide: ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!

By

Published : Jul 12, 2023, 2:44 PM IST

நகராட்சி திமுக பெண் கவுன்சிலர், கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMK woman councilor commits suicide with her family in Rasipuram
ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

நாமக்கல்: ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்லால், இவர் ராசிபுரம் கடை வீதியில் சிறிய அளவிலான நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திமுகவில் வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி தேவிபிரியா. இவர் தற்போது ராசிபுரம் நகராட்சியில் 13-ஆவது வார்டு திமுக கவுன்சிலவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திகா ஸ்ரீ பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகள் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.

நேற்று 11-ஆம் தேதி இரவு அருண்லால், நகைக்கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவில் அருண்லால், அவரது மனைவி தேவிபிரியா அருண்லால், அவர்களது 17 வயது மகள் ஆகியோர் வீட்டிற்குள் தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை கடை திறக்க அருண்லால் வராததால், கடை பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளனர்.

வீட்டின் கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால், அவர்களது உறவினர்கள் அங்குவந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்துச் சென்று, மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அருண்லால், தேவிபிரியா கடன் தொல்லையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அருண்லாலின் மூத்த மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20 லட்சம் வரை செலவு செய்து இருதய அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கவுன்சிலராக போட்டியிடுவதற்கு பல லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முடிவு வேண்டாம்.. உடனே 104 எண்ணை அழைக்கவும்

அதிகப்படியான கடன் காரணமாக திமுக பெண் கவுன்சிலர், அவரது கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த அருண்லாலின் தந்தை, தாய்‌ ஆகிய அனைவருமே திமுகவில் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vellore: பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்த தந்தை, பாட்டி கைது - மனைவியின் பரபரப்பு புகார்!

ABOUT THE AUTHOR

...view details