தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமையால் பெண் அடித்துக் கொலையா? - மயிலாடுதுறையில் பரபரப்பு!

By

Published : Apr 8, 2023, 9:31 PM IST

மயிலாடுதுறை அருகே இளம்பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதட்சணை கொடுமையால் பெண் அடித்துக் கொலையா? - மயிலாடுதுறையில் பரபரப்பு!
வரதட்சணை கொடுமையால் பெண் அடித்துக் கொலையா? - மயிலாடுதுறையில் பரபரப்பு!

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த பேட்டி

மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா தொடுவாய் என்னும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). இவருக்கும் வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். முன்னதாக திருமணம் நடைபெற்றபோது வரதட்சணை வேண்டாம் எனப் பேசி அர்ச்சனாவை முருகப்பன் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், திருமணம் முடிந்த பின்னர் ஆறு வருடங்களில் சிறிது சிறிதாக 18 சவரன் வரை வரதட்சணையாக முருகப்பன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மீண்டும் வரதட்சனை கேட்டுள்ளனர். ஆனால், அர்ச்சனாவின் குடும்பத்தினருக்கு மேலும் வரதட்சணை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அர்ச்சனாவின் குடும்பத்தினரை தங்கள் வீட்டுக்கு வரக் கூடாது என்றும் அதேநேரம் அர்ச்சனாவை அவரது பிறந்த வீட்டுக்கு அனுப்பாமலும் முருகப்பன் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) முருகப்பனின் உறவினர்கள் அர்ச்சனா குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது, ‘உங்களது மகள் அர்ச்சனா விஷம் குடித்து இறந்து விட்டார். எனவே அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அர்ச்சனாவின் கழுத்துப் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அர்ச்சனாவை முருகப்பன் மற்றும் அவரது பெற்றோர் அடித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அதேநேரம் இது தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அர்ச்சனாவின் 2 குழந்தைகளையும் கொண்டு வந்து ஒப்படைக்கவும் கோரிக்கை விடுத்த நிலையில், அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிணவறையின் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உரிய தீர்வு காணப்படாமல் அர்ச்சனாவின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அர்ச்சனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கும்போது உயிர் இருந்ததாகவும், சிகிச்சையின்போதே ரத்தம் வெளியேறியதாகவும் முருகப்பன் தரப்பினர் தெரிவித்தனர். மேலும், இது குறித்து பூம்புகார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் கல்லூரி மாணவிகள் குடுமி சண்டை .. வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details