நாகப்பட்டினம்:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை தொடங்கினார். கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றது.
தற்போது இந்த யாத்திரை டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின்போது செல்போன் மூலம் மிஸ்ட் கால் கொடுத்து பாஜகவில் இணைவது, கூடாரங்கள் அமைத்து நேரடியாக உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல வழிகளில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் நடைபெற்றது. நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அந்த பகுதியில் பந்தல் போடப்பட்டு, பாஜகவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் மிஸ்டு கால் கொடுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அங்கிருந்த சிலர் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த வெளிப்பாளையும் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் பாஜகவில் இணைவதற்காக, தங்களது கைப்பேசியில் இருந்து மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.