மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக் கூட்டம் நேற்றும், இன்றும் என இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், "சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது, நில உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கடந்த அதிமுக அரசு போட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுவது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசு அலட்சியம் காட்டுகிறது
டெல்லியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எட்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 585 விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு விவசாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.