மயிலாடுதுறை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் "மிக்ஜாம்" புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது.
தமிழ்நாடு அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 500 கிலோ அரிசி, பாய், போர்வை, பிஸ்கட், சீனி, கோதுமை, ரவை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டீத்தூள், கொசுவர்த்தி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்திற்கு, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் பொறுப்பாளர்கள் இன்று (டிச.10) அனுப்பி வைத்தனர்.