தமிழ்நாடு

tamil nadu

'நீ அங்க போயிருக்க... கூகுள் மேப் பொய் சொல்லாது' - மனைவியின் சந்தேகத்தால் கூகுள் மீது புகாரளித்த கணவர்!

By

Published : May 21, 2020, 7:53 PM IST

நாகப்பட்டினம்: கூகுள் மேப்ஸில் உள்ள யுவர் டைம்லைன் (google map - your timeline) பதிவுகளில் தவறான தகவல்கள் வருவதால் குடும்பத்தில் பிரச்னை வருகிறது என காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகை
நாகை

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சந்திரசேகரன் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில் கூகுள் மேப்-பின் யுவர் டைம்லைன் என்ற செயலியை ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அவரது மனைவி.

இதனிடையே, சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்கு கூட சென்று வந்ததாக கூகுள் மேப் காட்டியுள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மனைவி, தனது கணவர் யாரை பார்க்க போயிருப்பார்? யாரை சந்திச்சிருப்பார் போன்ற பல்வேறு கேள்விகளுடன் தூக்கத்தை தொலைத்து வேதனையில் இருந்துள்ளார். இப்பிரச்னை படிப்படியாக அதிகரித்து அவர்களது குடும்ப வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

கூகுள் மீது புகாரளித்த கணவர்

இந்நிலையில், சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குச் சென்று வந்ததாக நேற்று (மே 20) கூகுள் மேப் காட்டியதால் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்படும் என உறவினர்கள், மனநல மருத்துவர்கள் பலர் ஆலோசனைகள் கூறினாலும் அதை ஏற்காத சந்திரசேகரனின் மனைவி, கூகுள் பொய் சொல்லாது என்பதில் தீவிரமாக இருந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சந்திரசேகரன், பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்துள்ளார். நேராக மயிலாடுதுறை காவல் நிலையம் சென்ற அவர், பல்வேறு பிரச்னை ஏற்படுத்திய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீதி வழங்கவும், நஷ்டஈடு கோரியும் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details