தமிழ்நாடு

tamil nadu

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு : நள்ளிரவில் சாலை மறியல்!

By

Published : Apr 18, 2021, 5:39 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே கரானோ தொற்றால் இறந்தவர் உடலை, சுடுகாட்டில் தகனம் செய்ய உள்ளதாக வதந்தி பரவியதால், கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என மக்கள் சாலை மறியல்
இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்குளம்பியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (63). இவர் உடல்நலக் குறைவால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவருக்கு கரோனோ பரிசோதனை செய்ததில் கரோனோ தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று (ஏப். 17) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து நாகராஜ் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, திருக்குளம்பியம் மாதா கோயில் பின்புறம் ஆற்றங்கரை ஓரம் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்வதற்கான ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் சாலை மறியல்

சுடுகாட்டுப்பாதை புதர்மண்டியிருந்ததால் பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் இரவில் சரிசெய்தனர். அப்போது, கரோனா தொற்று ஏற்பட்டவரை புதைப்பதாக பரவிய தகவலால் சுடுகாட்டின் அருகில் குடியிருப்போர், உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆடுதுறை, எஸ்.புதூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புப் பகுதி பின்புறம் உள்ள சுடுகாட்டை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த குத்தாலம் வருவாய் துறையினரையும் மக்கள் திருப்பி அனுப்பினர். இதனைத்தொடர்ந்து இன்றுகாலை (ஏப். 18) திருக்குளம்பியத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

குத்தாலம் வட்டாட்சியர் இளங்கோவன், ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான பாலையூர் காவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். "சுடுகாட்டை இடமாற்றம் செய்ய மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்ததன் பேரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'முயல் வேட்டை: இருவருக்கு தலா ரூ.10,000 அபராதம்!'

ABOUT THE AUTHOR

...view details