தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமியை பார்த்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

By

Published : Jun 22, 2022, 10:29 PM IST

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமியை சந்தித்து பாராட்டிய அமைச்சர்
மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமியை சந்தித்து பாராட்டிய அமைச்சர்

மயிலாடுதுறை:மயிலாடுதுறையைச் சேர்ந்த பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் உதவியுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இந்தநிலையில், அந்த மாணவியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 22) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மாணவி கால்களால் வரைந்த ஓவியங்கள் அமைச்சர்களிடம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "இரண்டு கைகளையும் இழந்த மாணவி லெட்சுமி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். இந்த மாணவியின் தன்னம்பிக்கையைப் பார்த்து மற்ற மாணவர்களும் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவி லெட்சுமியை சந்தித்து பாராட்டிய அமைச்சர்

'எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்':தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைந்தாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு லெட்சுமி போல் நிமிர்ந்து நிற்க வேண்டும். மாணவி லெட்சுமியின் உயர் கல்விக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். காப்பகத்திற்குத் தேவையான உதவிகளும் செய்து தரப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளால் நிதிச்சுமை இருந்தாலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வகுப்புகள் தொடங்கும்" என்று கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்எல்ஏ நிவேதா முருகன், நகராட்சித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: +2 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு வி.கே.சசிகலா வாழ்த்து!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details