மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமத்துவம், சமுதாய ஒற்றுமை இருக்கிறது. வடக்கில் என்ன நடக்கிறது என்று மக்களுக்குத் தெரியும். மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் அல்ல பாஜக ஆளுநர்:தமிழக ஆளுநர் என்று சொல்லக்கூடாது பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது வன்முறை கூடாது. அறவழி போராட்டம்தான் செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஒதுக்கீடு 800 மெகாவாட் மெகாவாட் மின்சாரம் வராத காரணத்தாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணத்தாலும் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கோடைகாலத்தில் மின்பயன்பாடு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த தருணத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படுகிறது.