தமிழ்நாடு

tamil nadu

தொழிலாளி சாவில் சந்தேகம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

By

Published : Apr 18, 2021, 6:41 AM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே செங்கல் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் செங்கல் ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு பணிபுரிந்த நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சீனிவாசன் என்பவர், நேற்று (ஏப். 17) ஆலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்ட தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் அவரை அடித்துக் கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டதாகக் கூறியும், அதற்குக் காரணமான ஆலையின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்வரை சீனிவாசனின் உடலை எடுக்கப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செங்கல் ஆலை உரிமையாளர், ஊழியர்கள் ஐந்து பேர் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை செய்துவருவதாகவும், உடற்கூராய்வு அறிக்கைபடி விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனால், சுமார் 10 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, சீனிவாசனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தைக்காக தற்கொலை செய்துகொண்ட மகள்

ABOUT THE AUTHOR

...view details