தமிழ்நாடு

tamil nadu

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 12:15 PM IST

Salem GH fire accident: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால், எதிர்பாராத விதமாக தீப்பிடித்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில்  தீ விபத்து!
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

சேலம்:சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையின் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இன்று (நவ.22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, அதிக அளவு கரும்புகை சூழ்ந்து, அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளில் பரவத் தொடங்கியது. இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு செய்த 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து குறித்து மருத்துவமனை முதல்வர் மணி கூறுகையில், “விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் மாற்று சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு செயல்பட்டு வந்த அவசர சிகிச்சைப் பிரிவு, தற்காலிகமாக மாற்று இடத்தில் இயங்கும். இந்த தீ விபத்தில் மருத்துவ உபகரணங்கள் ஏதும் சேதமாகவில்லை. தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை வெளியேற வழியில்லாததால் மட்டுமே நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த தீயணைப்பு உபகரணங்கள் முழுமையாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது” என்று தெரிவித்தார். இதனிடையே விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக நேரில் வந்து பார்வையிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து, சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார். மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் மருத்துவமனையின் முதல் தளம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நரிக்குறவ இளைஞரை கத்தியால் குத்திவிட்டு ரயிலில் தப்பிய சைக்கோ நபர்.. புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details