தமிழ்நாடு

tamil nadu

சார்பு ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய குற்றவாளி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல் ஆய்வாளர் - மதுரையில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 10:41 PM IST

Police gun shot: சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்ற செயின் பறிப்பு குற்றவாளியை செல்லூர் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளால் தாக்க முயன்ற குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவலர்கள்
அரிவாளால் தாக்க முயன்ற குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவலர்கள்

மதுரை: கூடல்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தபால் தந்தி நகர்ப் பகுதியில், கடந்த 4ஆம் தேதி மகாத்மா காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்த லதா (44) என்ற பெண், இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், லதா கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறிக்க வழிப்பறியில் ஈடுபட்டனர்.

அப்போது, லதா சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று (நவ.09) தபால் தந்தி நகர்ப் பகுதியில் செயின் வழிப்பறி சம்பவ வழக்கில் தேடப்பட்டு வந்த செல்லூரைச் சேர்ந்த நாகராஜன் (48) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, செயின் பறிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான, காளவாசல் அருகே சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (21) என்பவர், மதுரை செல்லூர் களத்துப்பொட்டல் பகுதியில் பதுங்கியிருப்பதாக செல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் குமார், ஆய்வாளர் ஆறுமுகம் ஆகிய இருவரும் ஸ்டீபன் ராஜ்-யை கைது செய்யச் சென்றுள்ளனர். அப்போது, குற்றவாளி ஸ்டீபன் ராஜ் செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் குமாரைத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கையில் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார்.

அப்போது, தற்காப்பு காரணத்திற்காக ஆய்வாளர் ஆறுமுகம் ஸ்டீபன்ராஜின் கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், காயமடைந்து கீழே விழுந்த ஸ்டீபன் ராஜ், கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், கையில் காயமடைந்த சார்பு ஆய்வாளரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளி ஸ்டீபன் ராஜ், ஏற்கனவே கலைநகர், நாராயணபுரம், நத்தம் மேம்பாலம், செல்லூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுத் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், செயின் பறிப்பு குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், காயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித் குமாரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்துக் கேட்டறிந்து நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட குற்றவாளி ஸ்டீபன் ராஜ், இன்று காலை செயின் பறிப்பு சம்பவம் ஒன்றில் ஈடுபட முயற்சி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறுகையில், "கடந்த 4ஆம் தேதி தபால் தந்தி நகர்ப் பகுதியில் லதா என்ற பெண்ணிடம் செயினை பறித்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஸ்டீபன் ராஜ் மீது பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இதே போன்று மற்றொரு வழிப்பறி சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஸ்டீபன் ராஜை காவல்துறை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தாக்க முயன்ற ஸ்டீபன் ராஜை, அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக அவரது முழங்காலில் சுட்டுப் பிடித்து கைது செய்துள்ளோம்.

தற்பொழுது குற்றவாளி ஸ்டீபன்ராஜ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஸ்டீபன் ராஜ் மீது பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது. கடந்த 4ஆம் தேதி மழை பெய்த போதும் பெண்ணின் செயினை வழிப்பறி செய்து, இழுத்துச் சென்ற சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்வதற்கான தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஸ்டீபன் ராஜ் தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் ரஞ்சித்தும் சிகிச்சை பெற்றுவருகிறார். இருவரும் நலமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருமணமான பெண் தனது பிறந்த வீட்டின் தொடர்பைத் துண்டித்துவிட்டார் எனக் கூற முடியாது - நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details