தமிழ்நாடு

tamil nadu

‘நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்’ - நீதிபதி எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 8:53 PM IST

Judge Warning: அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளருக்குப் பணப்பலன் மற்றும் வாரிசு அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி எச்சரிக்கை
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் - நீதிபதி எச்சரிக்கை

மதுரை: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தவள்ளி. இவரது கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தார். இந்நிலையில் இவர், தனது கணவருக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் வாரிசு அடிப்படையில் பணி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கணவர் 427 நாட்கள் பணியாற்றி உள்ளதால் அவரை நிரந்தர பணியாளராகத்தான் கருத வேண்டும் எனக் கூறி, அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்கி, வாரிசு அடிப்படையில் வேலை வழங்க 4 வார காலத்தில் மனுதாரர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று (செப்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 3 வருட கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. போக்குவரத்து துறையில் பணிகளை, விதிகளை வரன்முறைப்படுத்துங்கள். பணியாளர்களுக்கான பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றை முறைப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை ஏதோ அலுவலக உத்தரவு போல அதிகாரிகள் எண்ணுகிறார்கள். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முதலில் அதிகாரிகள் படியுங்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ள அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு என்னவென்றே தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் அதிகாரிகள் இருக்கலாம். அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து பொறுத்து கொண்டு இருக்க முடியாது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் நோக்கம்” என்றார். மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனக் கூறியதோடு, இரண்டு நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details