தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி கோயிலில் நவராத்திரி திருவிழா

By

Published : Oct 7, 2021, 6:46 AM IST

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இன்றுமுதல் 15ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

navratri-festival-at-meenakshi-temple-madurai
navratri-festival-at-meenakshi-temple-madurai

மதுரை: இந்து சமய பண்டிகைகளில் நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் ஒன்பது நாள்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று அவரை வதம்செய்தார் என்பது நம்பிக்கை. இதன்படி, புரட்டாசி மாதம் 9 நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10ஆவது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இம்மாதம் இன்றுமுதல் (அக்டோபர் 7) வரும் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில், மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி, ஊஞ்சல், கோலாட்டம், பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்தல், மகிஷாசுரமர்த்தினி, சிவ பூஜை வெவ்வேறு அலங்காரங்களில், ஒன்பது நாள்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

காலையில் மூலவருக்கு அர்ச்சனை கிடையாது

இந்த உற்சவ நாள்களில் நாள்தோறும் மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தானம் சந்நிதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகிய கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரையில் நடைபெறும்.

எனவே, காலை நேரங்களில் பக்தர்களுக்குப் பூஜை அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது எனவும், கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குத்தான் அர்ச்சனைகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

இன்று முதல் 14ஆம் தேதி வரையில், காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு முதல்நாள் மூலஸ்தான அம்மன் அலங்காரத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்படுவர் எனவும், இதில் அக்டோபர் 8, 9, 10 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலு சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான பொம்மைகள், இதர பொம்மைகளை உபயமாக வழங்குபவர்கள் உள் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு

ABOUT THE AUTHOR

...view details