தமிழ்நாடு

tamil nadu

தேவர் தங்கக் கவசம் மதுரை வங்கியில் ஒப்படைப்பு..

By

Published : Nov 1, 2022, 8:28 PM IST

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலையில் பொருத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் ஒப்படைப்பு
தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் ஒப்படைப்பு

மதுரை: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ஆம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தேசிய வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாளும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தைப் பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.

அதிமுக உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தங்கக் கவசத்துக்கு உரிமை கோருவதற்காகக் கடந்த செப்.30 அன்று வங்கிக்கு நேரில் வந்து கவசத்திற்கு உரிமை கோருவதற்கான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.

பின்னர் அக்.3 அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், தர்மர் ஆகியோரும் தங்கக் கவசத்திற்கு உரிமை கோரி பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் கவசத்தைத் தர வங்கி நிர்வாகம் மறுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்டோபர் 18-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதே வழக்கில் இடையீட்டு மனுவாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை அக்.26ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இரு தரப்பினர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இருவருக்கும் கவசத்தைத் தர உத்தரவிட மறுப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு வந்த மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு கவசத்தைப் பெற்றனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான பலத்த காவல்துறை பாதுகாப்பில், கவசம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேவர் சிலைக்குக் கவசம் சார்த்தப்பட்டு அக்.28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் குருபூஜை விழா முடிந்து நவம்பர் 1 ஆம் தேதியன்று மீண்டும் தங்க கவசம் இதே நடைமுறையின் படி இன்று(நவ.01) வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் ஒப்படைப்பு

இதையும் படிங்க:செவாலியே விருது பெரும் இசைக் கலைஞர் அருணா சாய்ராம்!

ABOUT THE AUTHOR

...view details