தமிழ்நாடு

tamil nadu

பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக்குழு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 6:00 PM IST

Palani Temple: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமப்பு அகற்றும் விவகாரம் குறித்து உயர்மட்டக் குழு ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்
பழனி தண்டாயுதபாணி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு, வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் பழனி முருகன் கோயிலில் கிரிவலப்பாதை எனப்படும் 6 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரி வீதியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோயில் அதிகாரிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று (ஜன.3) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "பழனியில் தைப்பூச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பல லட்சம் பக்தர்கள் வருடந்தோறும் பழனி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். ஆனால், மொத்தமாக 6 கிலோமீட்டர் உள்ள கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் இப்போதும் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிட்டார்.

தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், "பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், உடனடியாக தற்காலிக ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. அதனை அகற்றவும், முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ஆணையர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி, “கோயில் செல்லும் சாலைகள் மலைப்பாதை கிரி வீதிகளில் தற்காலிக ஆக்கிரமிப்பு மட்டுமில்லை, நிரந்தர கட்டட ஆக்கிரமிப்புகளும் உள்ளது" என அறிக்கை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அனைவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் கிரி வீதிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.

பக்தர்கள் வரும் பாதைகளில் எந்த இடையூறும், ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், அதனை அதிகாரிகள் உடனுக்குடன் தாமதமின்றி அகற்ற வேண்டும். நீதிமன்றம் சட்ட விரோத ஆக்கிரமிப்பு அகற்ற பல முறை உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பழனி கோயில் கிரிவலப் பாதையில் இனிமேல் தள்ளுவண்டி கடைகள்கூட ஆக்கிரமிப்பு செய்து அமைக்கக்கூடாது. எந்த விதமான ஆக்கிரமிப்புகளுக்கும் இடமளிக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, "பழனி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்பு உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள். இந்தக் குழு, பழனி கோயில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அதன் விரிவான அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கு; சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details