தமிழ்நாடு

tamil nadu

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு : உயர் நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jun 22, 2021, 3:47 PM IST

கடந்த 2013 - 2021 ஆகிய ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முறைகேடு செய்துள்ள தொடரப்பட்ட வழக்கில், வேளாண்துறை இயக்குநரை எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அலுவலர் எதிர் மனுதாரர் என சேர்க்க உத்தரவு
ஐஏஎஸ் அலுவலர் எதிர் மனுதாரர் என சேர்க்க உத்தரவு

மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் வழங்கக்கூடிய மானியத் திட்டங்களை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வேளாண் இயக்குநர்கள், அலுவலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர். கடந்த 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி முன்னாள் வேளாண்துறை அமைச்சரின் உறவினர் என்பதால் பல முறைகேடுகள் செய்துள்ளார்.

சொட்டுநீர் பாசன உபகரணங்களை வழங்கும் திட்டம், மானிய இயந்திரங்கள் கொள்முதல், விதை கொள்முதல், டேப்லெட், கணினி கொள்முதல் திட்டம், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம் உள்ளிட்டவற்றில் போலி விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளார். இந்த திட்டங்களை செயல்படுத்தி ரூ.1,000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறைகள் மீறி விவசாயிகளுக்கு புயல் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் உண்மையான விவசாயிகள் எவ்வித பலன்களை அனுபவிக்க முடியாமல் உள்ளனர். இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சிலர் தற்போது பணி ஓய்வு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பல மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கடந்த 2013 - 2021 ஆகிய ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முறைகேடு செய்துள்ள வேளாண்துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் புகார் கூறப்பட்டுள்ள ஐஏஎஸ் அலுவலர் தட்சிணாமூர்த்தியை வழக்கில் எதிர் மனுதாராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால பணப் பயன்களை குறைத்து பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்க'

ABOUT THE AUTHOR

...view details