தமிழ்நாடு

tamil nadu

விஏஓ இலவச வேட்டி சேலைகளை பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து!

By

Published : Jul 13, 2023, 2:22 PM IST

கிராம நிர்வாக அலுவலர் மீது இலவச வேட்டி சேலைகளை பதுக்கியதாக பொய் வழக்கு குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

false-case-of-hoarding-free-vetti-sarees-high-court-quashes-chargesheet
இலவச வேட்டி சேலைகளை பதுக்கியதாக பொய்வழக்கு:குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை :காரைக்குடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) நான் பணிபுரிந்து வந்தேன்.

அங்கு பல்வேறு நில ஆக்கிரமிப்புகள் குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுபவர்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்ததால், என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கோரி காவல் துறையிடம் கடந்த 2016ஆம் ஆண்டு மனு அளித்தேன்.

இதனால் என் உயர் அதிகாரிகளால் நான் தூதை என்ற கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். இதனையடுத்து பணி மாற்றத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து பணியிட மாறுதலுக்கு தடை உத்தரவு பெற்றேன்.

இதன் காரனமாக எனது உயர் அதிகாரிகள் என் மீது பல விதத்தில் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.
குறிப்பாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் நான் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதனை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்ததாகவும் என் மீது பொய்யான வழக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பதியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யபட்டது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் நேர்மையான பணியாளர் என்பதால் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்டுள்ளார். மேலும் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பாக மாட்டார். இந்த வழக்கு முற்றிலும் பொய்யாக தொடரப்பட்ட வழக்கு என்பதால், இவர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அரசு தரப்பில் இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து காரைக்குடி கீழம நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற உள்ளதால், இந்த வழக்கு ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கி உள்ள தீர்ப்பில், “மனு தாரரான கிராம நிர்வாக அலுவலர் இலவச, வேட்டி சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதம் கவனிக்கத்தக்கது. மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.

இலவச வேட்டி, சேலைகளுக்கான பொறுப்பு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவர். எனவே அரசின் இலவச, வேட்டி சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:யூடியூப் பார்த்து 1 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் தயாரித்த இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details