தமிழ்நாடு

tamil nadu

Kallalagar: வைகையில் இறங்கிய கள்ளழகர்.. மதுரையை அதிர வைத்த 'கோவிந்தா' முழக்கம்!

By

Published : May 5, 2023, 9:14 AM IST

Updated : May 5, 2023, 10:27 AM IST

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. வான்முட்டிய ‘கோவிந்தா’ முழக்கம்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. வான்முட்டிய ‘கோவிந்தா’ முழக்கம்

பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 20ஆம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 5) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

இதனையொட்டி கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மதுரை மூன்று மாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவையும், நேற்று (மே 4) இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண்ணசாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து பச்சை பட்டு உடுத்தி, பக்தர்கள் புடை சூழ 'கோவிந்தா' முழக்கம் விண்ணை முட்ட வைகை கரை வந்தடைந்தார். அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா காலை 5.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், நேற்று இரவே தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு நின்றனர். அதேநேரம், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியினர் செய்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததுடன், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆழ்வார்புரம் வழியாகச் செல்லும் கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அங்கு தண்ணீர் பீய்ச்சி பக்தர்கள் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். பிறகு அங்கிருந்து வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு பயணமாகிறார். நாளை (மே 6) இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரக் காட்சிகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:மதுரை சித்திரைத்திருவிழா - முதன்முறையாக ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்!

Last Updated :May 5, 2023, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details