தமிழ்நாடு

tamil nadu

சிறையில் உள்ள வரிச்சியூர் செல்வத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 3:56 PM IST

Updated : Oct 12, 2023, 4:50 PM IST

Varichiyur selvam: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நபரான வரிச்சியூர் செல்வம் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அதில், "கடந்த செப்டம்பர் மாதம் சுகந்தா என்பவர் கூலி வேலைக்காக வெளியூர் சென்ற தனது கணவர் புவனேஸ்வரன் வீடு திரும்பவில்லை, அவரை காணவில்லை என கூறி விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் மனுதாரர் குறித்து எந்தவித தகவலும் இடம்பெறவில்லை.

ஆனால், காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என்று புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் என்னை வழக்கில் சேர்த்து கைது செய்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக என் மீது எவ்வித புதிய வழக்குகளும் பதியப்படவில்லை. ஆள் காணவில்லை என கூறும் வழக்கில் எனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லாத நிலையில் என்னை வழக்கில் சேர்த்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன். இதனால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், மனுதாரர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டு வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும். எனவே ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தேனி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் உயிரிழப்பு!

Last Updated :Oct 12, 2023, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details