கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.
ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் நிலையம் வரை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம்வரை சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரை ஓரம் தற்காலிகக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதுபோன்ற அனுமதியை வழங்கக் கூடாது. ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் தற்காலிகக் கடைகள் மூலமாக ஏற்படும் குப்பைகளும் நெகிழிக் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் கடலில் வசிக்கும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கிறது.
கன்னியாகுமரி பேரூராட்சியின் இந்தச் செயல் கடற்கரைச் சூழலை பாதிக்கும். கடலோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அனுமதித்தால் கண்டிப்பாக அது கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.