தமிழ்நாடு

tamil nadu

வணிக நோக்கில் சுரண்டப்படும் நிலத்தடி நீர் குறித்து வழக்கு தள்ளி வைப்பு!

By

Published : Aug 9, 2023, 8:34 PM IST

நிலத்தடி நீர் வணிக நோக்கில் எடுப்பதாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கிற்கு, நீர் வளத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

சிவகாசியில் வணிக நோக்கிற்காக சுரண்டப்படும் நிலத்தடி நீர்
சிவகாசியில் வணிக நோக்கிற்காக சுரண்டப்படும் நிலத்தடி நீர்

மதுரை:சிவகாசி ஆணையூர் கிராமம் அண்ணாமலையார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் A.S. கருணாகரன். இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சிவகாசி அண்ணாமலையார் காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு உரிய நீர் ஆதாரத்திற்கு, எங்கள் தனிப்பட்ட நபர்களின் வீடுகளில் அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.

சில நாள்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சில நபர்கள் வந்து ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பல நாள்களாக பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு கிடந்த கிணற்றினை சரிசெய்து, அதில் வணிக நோக்கில் தண்ணீரினை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அனுமதி பெறவில்லை.

ஆழ்துளைக் கிணற்றில் வித்திட்ட அளவிற்கு கூடுதலாக தண்ணீர் எடுக்கும் பட்சத்தில், எங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீரின் அளவு இல்லாமல் போய்விடும். எனவே அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் இன்று (ஆகஸ்ட்.09) விசாரணைக்கு வந்தது. அப்போது நீர் வளத்துறை செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 2014 ஆம் ஆண்டு, நிலத்தடி நீர் குறித்து வெளியிடப்பட்ட அரசாணையின் படி தான், தற்போது செயல்படுகிறோம். நிலத்தடி நீரை எடுக்க வேண்டும் என்றால், உரிமம், மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். இதன் அடிப்படையில் செயல்படுகிறோம்.

மேலும், நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுப்பதை வரைமுறை படுத்தும் வகையில், சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. மசோதா இறுதி செய்யப்பட்ட பிறகு, நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுப்பது குறித்து வரைமுறை படுத்தும் வகையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டும்" என குறிப்பிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்டு 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:Covai - குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details