தமிழ்நாடு

tamil nadu

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

By

Published : Jul 2, 2023, 9:19 AM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரை வருகிற ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்
மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்

மதுரை:மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.1992 - 1996 வரையிலான கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றுகளை வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தேன். இந்தக் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டதாகும்.

இறுதியாக நடைபெற்ற தேர்வு முடிவு பட்டியலில் எனது பெயர் மற்றும் தேர்வு எண் இல்லை. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள். பின்னர், பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் திருப்பணிகள் - கண்டித்த நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்துத் தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன். இதனை அடுத்து தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். இதுவரை அதற்கான மதிப்பெண் பட்டியல் தரவில்லை” என கூறப்பட்டிருந்தது.

ஆகவே, பழனிச்சாமி பொறியியல் படிப்பிற்கான அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடுமாறு கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும், பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும், வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின்போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் நீதிபதி, மதுரை காமராஜர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி, பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரம்.. டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுத்த 8 பேர் நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக ஆஜர்..!

ABOUT THE AUTHOR

...view details