தமிழ்நாடு

tamil nadu

நகைக்காக முதியவர் கொலை - கைரேகை மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது!

By

Published : Aug 11, 2023, 7:25 PM IST

மதுரை அருகே நகைக்காக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கைரேகை மூலம் குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லணை. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லணை என்பவர் அங்குள்ள கோயிலில் காவலராகப் பணியாற்றி வந்தார். அந்த கோயிலில் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக வந்த ஒரு கும்பல், அங்கிருந்த கல்லணையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் கண்டுபிடிக்க இயலாத வழக்கு என முடித்து வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம், குற்றச் சம்பவங்களில் கண்டறியப்படும் விரல் ரேகைகளை ஒப்பிட்டு குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு (National Automated Finger Print Identification System - NAFIS) என்ற மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. மேற்படி மென்பொருளைப் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சி மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் பழைய வழக்குகள் அனைத்தும் தற்போது மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு முடித்து வைக்கப்பட்ட வழக்கில் பதியப்பட்ட கைரேகையை ஆய்வு செய்யும்போது, அது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல்ராஜ் என்ற 31 வயதுடைய நபரின் கைரேகை என்பது தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட போது, மேற்கண்ட வழக்கின் கைரேகையுடன் அவரது கைரேகையும் ஒத்துப்போனதால், அந்நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கல்லணை, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவராகப் பொறுப்பிலிருந்து வரும் மகா சுசீந்திரனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ஒரு வழக்கில் நவீன மென்பொருள் மூலமாக தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடித்த காவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:சொத்துத் தகராறில் அண்ணன் மகனை கொலை செய்த நபர் - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details