தமிழ்நாடு

tamil nadu

ஓசூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 12:11 PM IST

Organ donation: ஓசூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Organ donation
ஓசூரில் மூளை சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

ஓசூரில் மூளை சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அரிமா சங்க உறுப்பினரும், மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் துணைச் செயலாளருமான ஹம்ரேஷ் என்பவரது மனைவி ஹேமாவதி (வயது 39). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹேமாவதி கடந்த 25ஆம் தேதி தீராத தலைவலி காரணமாக ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் ஹேமாவதியை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு மூளையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்த போது ஹேமாவதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

ஹேமாவதியின் உடல் உறுப்புக்களை கணவர் மற்றும் பிள்ளைகள் தானமாக வழங்க முன்வந்த நிலையில், அவரின் சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புகள் 6 பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. முன்னதாக, தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, ஹேமாவதியின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, ஆர்ஐ ரமேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் மாரியப்பன். இவர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதன் பின் இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தற்குரிய போட்டித் தேர்வு - தேர்வை புறக்கணிக்க டெட் ஆசிரியர்கள் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details