கிருஷ்ணகிரிநகராட்சி பழையப்பேட்டையில் வீட்டில் செயல்பட்டு வந்த உணவகம் ஒன்றில் கேஸ் கசிவு ஏற்ப்பட்டு தீ விபத்துக்குள்ளானது. இதில், அருகே உள்ள ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் தீ பரவிய நிலையில், தீ விபத்து கோர சம்பவமாக மாறியது. மூன்று வீடுகள் தரைமட்டமாகி, நடந்து சென்றவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர் ரவி (45), அவரது மனைவி ஜெயஸ்ரீ (40), மகள் ரித்திகா (17), மகன் ரித்தீஷ் (15) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
முகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுவர்களும் இந்த விபத்தில் உயிரிழக்க நேர்ந்தது. மேலும், அருகில் வெல்டிங் கடை நடத்திய இப்ராஹிம், இம்ரான் ஆகிய இருவர், ஹோட்டல் நடத்திய ராஜேஸ்வரி, வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்த சரசு, ஜேம்ஸ் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில், குடோனில் பணியில் இருந்த சிலர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். கரும்புகையுடன் இருந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடுபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.