கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருவிழா 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவானது, இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நடைபெறும்.
இந்த புத்தகத் திருவழாவை இன்று (ஜூலை 14) அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரயு, சட்டப்பேரவை உறுப்பினர், மேயர் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த புத்தகத் திருவிழாவில், 95 அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை மையமாகக் கொண்டும் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில், இந்த ஆண்டு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 90 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனையும் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓசூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புத்தகத்திருவிழா 12ஆம் ஆண்டாக இன்று தொடங்கப்பட்டிருப்பதால் புத்தக வாசிப்பாளர்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.