தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! 13 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:54 PM IST

Updated : Oct 7, 2023, 11:06 PM IST

தமிழக எல்லையின் அருகில், ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில், தமிழகத்தை சேர்ந்த 13 தொழிலாளர்களின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளன.

ஒசூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
ஒசூர் அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

Karnataka Cracker Shop Fire

கிருஷ்ணகிரி:ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. தீபாவளியையொட்டி, வியாபார நோக்கத்துடன், மேலும் 2 கடைகளை அருகிலே பட்டாசு கடை நிர்வாகம் திறந்து உள்ளது.

இந்தக் கடையில் அரூர், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி ஆகிய பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட தமிழக இளைஞர்கள் வேலை செய்து வந்து உள்ளனர். இந்நிலையில், கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையில், கூடுதலாக 2 டாடா ஏஸ் வாகனத்தில் பட்டாசுகள் வந்து இறங்கி உள்ளன.

பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது திடீரென தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென எரிய தொடங்கிய நிலையில், கடை முழுவதும் பரவியது. இதில் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அனைத்து பட்டாசுகளும் தீக்கு இரையானது. இதுகுறித்து அத்திப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரமாக போராடி தீயை அணைக்க முயன்றனர். தீ பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எதிர்பாராமல் தீப்பிடித்ததா அல்லது கடையின் மீது தாழ்வாக இருந்த மின்கம்பி உரசி தீப்பற்றியதா என்று தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாகவே இந்த தீ விபத்து ஏற்ப்பட்ட நிலையில், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அவ்வழியாக சென்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தீ விபத்தை கண்டனர். இதனைத் தொடர்ந்து, பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடையில் வேலை செய்து வந்த இன்னும் சிலர், பின்வாசல் வழியாக தப்பினார்களா, அல்லது விபத்தில் சிக்கினார்களா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இங்கு வேலை பார்த்து வந்த அனைவரும் தமிழர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில் சம்பவ இடத்தில் இருந்து 13 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:karnataka Cracker Shop Fire : கர்நாடகா பட்டாசு கடையில் தீ விபத்து! 11 பேர் பலி! தமிழர்கள் உயிரிழப்பா?

Last Updated : Oct 7, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details