கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பழமை வாய்ந்ததும், மிகவும் பெரிய அளவிலான ராமநாயக்கன் ஏரி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுமார், 156 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியைக் கட்டியவர் பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கனார். அதனால் இவரது பெயரிலே இந்த ஏரி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் உள்ள நீர் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இந்த ஏரிக்கரையை ஒட்டி சுமார் 50க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பங்கள், துணிகளைத் துவைத்து உலர்த்தி சலவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சலவைத் தொழிலை மேற்கொண்டு வருவதால், அவர்களுக்கென்று பிரத்தியேகமாகச் சலவை தொழிலாளர்கள் விடுதி, துணிகளை உணர்த்துவதற்கான அமைப்பு மற்றும் நீர்த்தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்தப் பகுதிகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் பசுமை பகுதிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் திட்டம் தீட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் வசித்து வரும் சலவைத் தொழிலாளர்கள் தங்களது பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறி, மாநகராட்சி சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.