தமிழ்நாடு

tamil nadu

தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி! முறையற்ற சிகிச்சை காரணமா? பெற்றோர் தர்ணா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:58 AM IST

Updated : Sep 30, 2023, 1:44 PM IST

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

college-student-dies-due-to-wrong-treatment-in-hospital
மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு ...

தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் பூஜா ஸ்ரீ (வயது 17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி பூஜா ஸ்ரீ உடற்சோற்வு மற்றும் காய்சல் காரணமாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து நேற்று (செப். 29) காலை 10.30 மணியளவில் சிறுமிக்கு பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணியளவில் திடீரென இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு நீர் நிரம்பி உள்ளதாகவும், கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் ஒசூர் காவேரி மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு உள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் நள்ளிரவு முதல் சிறுமிக்கு சிகிச்சை அளித்தும், பிரச்சினைகளை முன்கூட்டியே கூறாமால் 15 மணிநேர சிகிச்சைக்கு பிறகு தான் பிரச்சினைகளை கண்டறிய முடிந்ததா?, எனக் கூறி சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் நகர போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெற்றோரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, "பூஜாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் 28 தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.

அங்கு இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். பின்னர் காலை 10.30 மணியளவில் பூஜாவிற்கு உடல்நிலை சீராக இருப்பதாகவும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு பரிசோதித்துப் பார்க்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர். பின்னர் 4 மணி அளவில் பூஜாவை மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் நீர் நிரம்பி உள்ளதாகவும், சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்ட 15 மணி நேரம் கழித்து தான் இந்த தகவலைக் கூறினார்கள். பின்னர் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பூஜை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். என்னுடைய குழந்தைக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் ஒசூர் தனியார் மருத்துவமனை மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், சரியான சிகிச்சை இல்லை, அதிக பணம் வசூலிப்பு உள்ளிட்ட அடுக்கடுக்கான புகார்கள் இந்த தனியார் மருத்துமனை மீது கூறப்படும் நிலையில் மருத்துவமனையை ஆய்வு செய்து, சுகாதார அதிகாரிகள் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு! அதிகாலை நடந்த சோகம்!

Last Updated : Sep 30, 2023, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details