தமிழ்நாடு

tamil nadu

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா; கரூரில் எஸ்ஐ கையை முறுக்கிய இளைஞர்கள்... கடுப்பில் நடந்த தடியடி

By

Published : Jan 3, 2023, 11:05 PM IST

கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ஊர்வலத்தின்போது, அத்துமீறிய இளைஞர்களை தடுத்து நிறுத்திய பெண் உதவி காவல் ஆய்வாளரை இளைஞர்கள் சிலர் தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா; கரூரில் எஸ்ஐ கையை முறுக்கிய இளைஞர்கள்... கடுப்பில் தடியடி

கரூர்:சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, நகரில் அனுமதியை மீறி 100-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன.3) இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, ஜவஹர் பஜார் முதல் கோவை சாலை வரை சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் கூச்சலிட்டபடி சென்றனர்.

அத்துமீறி ஊர்வலம்:இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் திடீரென இளைஞர்களைப் பிடித்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது, பெண் உதவி காவல் ஆய்வாளர் பானுமதி, அவ்வழியாக கூச்சலிட்டபடி சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பெண் எஸ்ஐ-க்கு எலும்பு முறிவு: அப்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் பானுமதியின் கையைப் பிடித்து முறுக்கி சாவியைப் பிடுங்கிக்கொண்டு அந்த இளைஞர்கள் மீண்டும் கூச்சலிட்டபடி சென்றனர். இதில், பெண் காவல் உதவி ஆய்வாளர் பானுமதிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் சத்தமிடவே, அருகிலிருந்த பிற காவலர்கள் அவரை மீட்டு கரூர் அமராவதி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் தடியடி:இதனிடையே கரூர் பேருந்து நிலையம் எதிரே வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா மேடை அருகே போலீசார் பெண் காவலரை தாக்கிய இளைஞர்கள் குறித்து கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அங்கிருந்தவர்கள் சாலையில் அமர்ந்து கூச்சலிட்டதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக, கரூர் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து கரூர் நகர் பகுதியைச் சுற்றி கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் விழா!

ABOUT THE AUTHOR

...view details