திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். குளித்தலை திமுக சட்டப்பேரவை வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து நெய்தலூர் பகுதியிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து புலியூர் பாலவிடுதி பகுதியிலும் அவர் வாக்கு சேகரித்தார்.
தொடரந்து நேற்று (மார்ச்.29) மாலை அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து ஈசநத்தம் கடைவீதியில் பரப்புரையைத் தொடங்கி, பள்ளப்பட்டி ஷா கார்னர் பகுதியில் இஸ்லாமிய பெருமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்று உரையாற்றி அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கரோனா தடுப்பு காலத்தில் வேலை இழந்துள்ள கூலித் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு வெறும் ஆயிரம் ரூபாய் வழங்கியது.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்காயிரம் ரூபாய் வழங்குவோம். எனது மகள் மருத்துவராக இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினார். எனது பேத்தியை அவர் வாகனத்தில் இருந்தபடியே பார்த்து விட்டு செல்வார்.
அந்த அளவுக்கு கரோனா தடுப்பு பணியில் குடும்பத்தைப் பிரிந்து மருத்துவர்கள் சிறப்பாக உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். அந்த இக்கட்டான காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்துவோம்.
திமுக போன்ற இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை திறமையாகக் கையாண்டு, எதிர்கொண்டு இருப்பார்கள். தற்போது கரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.